காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மீண்டும் உச்சகட்ட அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
வரவிருக்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரைச் சந்திக்க தமிழ்நாடு முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், "இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்" என்று சிவகுமார் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் குருவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக காவிரியில் உரிய தண்ணீரைத் திறக்கக் கோரியும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் முடிவு செய்திருந்தார். இதற்காக அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவுடன் ஆகஸ்ட் 3 அன்று பெங்களூரு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மாநிலத்தில் நிலவும் உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த பயணத்தைத் தள்ளி வைக்குமாறு கர்நாடக முதல்வர் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறியது என்ன?
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், தற்போதைய சூழலில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவது சரியான முடிவாக இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
"தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இரு மாநில எல்லையிலும் காவிரி விவகாரம் தொடர்பாகச் சூழல் சரியாக இல்லை. எங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் அரசு விருந்தினருக்கு எந்தவித அசம்பாவிதமும் அல்லது சிக்கலும் வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. சூழல் சரியான பிறகு, உரிய நேரம் வரும்போது இரு மாநில நலன்களுக்காகச் சந்தித்துப் பேசலாம், என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி மற்றும் மேகதாது பிரச்சனை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவது என்ற அறிவிப்பு வெளியானது.
இந்தச் சந்திப்பிற்காக அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட தூதுக்குழுவில்: அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் மற்றும் நிர்மல் குமார் தலைமைச் செயலாளர் சாய் குமார் முதல்வரின் செயலாளர்கள் செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாஹூ நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் அடங்கியிருந்தனர்.
இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சனையில், அமைதியான முறையில் தீர்வுகாண எடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்காலிகமாகத் தள்ளிப்போயுள்ளது. கர்நாடக முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
