பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது 'வீ தி லீடர்' இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேசிய கட்சிகளின் வழக்கமான அமைப்பு முறையை பின்பற்றாமல், தமிழக அரசியலில் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "கழக" பாணியிலான கட்சிக் கட்டமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவராக இருந்த காலத்திலேயே, தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறை தமிழக மக்களின் அரசியல் மனநிலையுடன் முழுமையாக ஒத்துப்போவதில்லை என்று அண்ணாமலை பல்வேறு மேடைகளில் கருத்து தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, கட்சி நிர்வாக கட்டமைப்பில் அடிமட்ட தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு குறைவாக இருப்பதாக அவர் கருதினார். இதன் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் அவரது புதிய அரசியல் இயக்கத்தில், வார்டு முதல் மாநில அளவு வரை வலுவான அமைப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.
திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் காணப்படுவது போல, வார்டு, கிளை, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என பல அடுக்குகளில் நிர்வாகிகளை நியமித்து கட்சியை விரிவுபடுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 'வீ தி லீடர்' அமைப்பின் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்பு முறையை வடிவமைப்பதற்காக, கடந்த காலங்களில் திராவிட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அனுபவம் வாய்ந்த சில முன்னாள் நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல தசாப்தங்களாக அடிமட்ட அமைப்புகளை எவ்வாறு கட்டமைத்து வளர்ந்தன?, அந்த அமைப்புகள் தேர்தல் வெற்றிக்கு எவ்வாறு உதவின? என்பதைக் குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
அதே நேரத்தில், தனது புதிய கட்சியில், பழைய அரசியல் கட்சிகளில் இருப்பது போல் குறைகள் இருக்கக்கூடாது என்பதிலும் அண்ணாமலை கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக ஒரே நபர் முக்கிய பதவிகளில் நீடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, ஒரு நிர்வாகி எத்தனை ஆண்டுகள் ஒரு பதவியில் தொடர முடியும், ஒரே நபர் எத்தனை முறை தேர்தலில் போட்டியிடலாம், பதவி உயர்வு மற்றும் பொறுப்பு மாற்றங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள மாநில பொதுச்செயலாளர், மாநில செயலாளர் போன்ற பதவிகளுக்கு பதிலாக, மண்டல அடிப்படையிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் நிர்வாக செயல்பாடுகளை விரைவாக ஒருங்கிணைக்க முடியும் என அண்ணாமலை தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் தற்போது புதிய மாற்றங்கள் உருவாகி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் முயற்சி பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு அடுத்த சில வாரங்களில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
